கடுகு.காம்
- Kadugu.Com
கட்டுரைகள்
அப்துல் கலாம் ஐயா, இது சரியா?
17-04-2008
சில நாட்கள் முன்பு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஒரு யோசனை சொல்லியிருந்தார்.
நம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்த வேண்டும். இதற்கு அவர்களை ஹார்வர்டு, வார்ட்டன் போன்ற மேனாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி ஒரு வருட காலம் பயிற்சி பெற செய்யலாம். பயிற்சிக்கு ஏதுவாக அவர்களின் பதவிக்காலத்தை ஐந்து வருடத்திலிருந்து ஆறு வருடமாக உயர்த்திக் கொள்ளலாம்.
இங்கு சில கேள்விகள் எழுகின்றன...
ஹார்வர்டு, வார்ட்டன் போன்ற மேனாட்டு பல்கலைக்கழகங்கள் என்றால் உயர்த்தியா? இங்கே இந்தியாவில் நிர்வாகம் நடத்த அங்கே போய் ஏன் படிக்க வேண்டும். அந்த நாடுகள் திறனின்றி இருப்பதால் தானே இங்கிருந்து மனிதவளம் அங்கே ஏற்றுமதியாகின்றது... இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் போன்றவை எல்லாம் வெத்து வேட்டு பள்ளிகள் தானா?
பிரதமர்
மன்மோகன்சிங் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக கல்லூரிகளில் பயின்றவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர் நிதியமைச்சர்
ப.சிதம்பரம்.
இவர்களின் நிர்வாகத்தில் இன்று நாடு சீரழிவதைப் பாருங்கள்.....
கட்டுக்கடங்காமல் எகிறும் விலைவாசியைக் கட்டுப்படுத்த துப்பின்றி நாளுக்கொரு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் ப.சிதம்பரம்.
தன்னிடம் தலைமைப் பதவி தரப்பட்டும், நிழல் தலைமையின் அடிமையாக சுயமாக முடிவெடுக்க முடியாமல் விழிக்கிறார் பிரதமர். கூட்டணிக்கட்சிகளின் தாக்குதல்களை சமாளிக்கவே இவருக்கு திறமை போதவில்லை.
பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினருக்கு நிர்வாக திறமை இல்லை
என்றால் அவரை தேர்ந்தெடுப்பது சரியா? இவர்கள் போன்றோரை தேர்தலில் போட்டியிட
அனுமதிக்கலாமா? ஓரளவேனும் நிர்வாகத் திறன் உடையவர்கள் மட்டும் தேர்தலில் போட்டியிட வகை செய்யுமாறு சட்டத்திருத்தம் செய்யலாமே?
அரசு நடத்த அர்த்தசாஸ்திரம் போன்ற ஒப்பற்ற நூல்கள் மூலம் வழிவகுத்த பூமி இது. நாம்தான் உலகமயம், பொருளாதாரமயம் போன்ற மாயைகளில் நமது சுயத்தை இழந்து காலிப்பெருங்காய சீசாக்களாக இருக்கிறோம்.
அப்துல்கலாம் ஐயா உங்களிடமிருந்து நாங்கள் இந்தவிதமான யோசனைகளை எதிர்பார்க்கவில்லை.... நீங்களும் இப்படித்தானா?....
====++++====