அரசியல்

தமிழுணர்வு

செய்தி : சென்னை, பிப். 15: மக்களிடையே தமிழ் உணர்வு தழைக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் க. அன்பழகன் தெரிவித்தார். சென்னையில் முரசொலி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் அவர் வெள்ளிக்கிழமை பேசியதாவது:

தமிழகம் வாழ்வும், தமிழ் மொழி வளமும் பெற வேண்டும். தமிழர்களுக்கு அடையாளத்தை உருவாக்குவது மட்டுமன்றி அதை அவர்களுக்கு நினைவூட்டவும் வேண்டும்.

ரொம்ப‌ ச‌ரியா சொன்னீங்க‌. இப்போ த‌மிழ‌ன் அடையாள‌ந்தெரியாம‌ ஆயிட்டான்னு ஒத்துக்கிட்டீங்க‌. தான் தமிழன்னு அவ‌னுக்கு ம‌ற‌ந்து போச்சுன்னும் உங்க‌ளுக்கே தெரியுது, அதுக்கு கார‌ண‌ம் ஒங்க‌ள‌ மாதிரி ஆளுங்க‌தான்னும் ஒங்க‌ளுக்கு தெரிஞ்சிருக்க‌ணுமே?

தமிழர்கள் தங்களது தனித்தன்மை மிகுந்த அடையாளங்களை ஒருபோதும் இழக்கக் கூடாது. நமது அடையாளங்களை இழந்தால், அந்த அளவுக்கு தமிழினம் தாழும்.

அதான் த‌மிழ‌ன் எல்லாத்தையும் உதுத்துட்டு நிக்க‌றானே; இப்பிடி பேசிப்பேசியே எல்லாத்தையும் அரசியல்வாதிங்களே புடுங்கிட்டீங்க. இனி என்ன‌ அவ‌ன்கிட்டே இருக்கு புடுங்க‌ற‌துக்கு. இனிமேலும் அவ‌ன் த‌ரந்தாழ‌ வாய்ப்பு இருக்குங்கிறீங்க‌ளா?  நீங்க‌ கோமாவுலெ இருந்து ச‌மீப‌த்துல‌ முழிச்சீங்க‌ளா என்ன‌?

நாம் தமிழர்கள் என்ற தமிழ் உணர்வு தழைக்க வேண்டும். நமது மொழி உயர் தனிச் செம்மொழி என்று பெருமை கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட நமது மொழி தற்போது செம்மொழியாக உயர்ந்துள்ளது என்றார் அன்பழகன்.

முத‌ல்ல‌ அர‌சிய‌ல் க‌ச்சிக்கார‌ங்க‌ளை வேட்டி க‌ட்ட‌ச்சொல்லுங்க‌ பாப்போம். ஒரு கால‌த்துல‌ தமிழுணர்வு ஒழுங்காதான் இருந்துச்சி, என்னிக்கு திராவிட‌ங்க‌ன்னு முழ‌ங்க‌ ஆர‌ம்பிச்சாங்க‌ளோ அப்ப‌வே அதுக்கு ச‌ங்கு ஊதியாச்சி.

இவ்விழாவில் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி பேசியதாவது:

உலகின் கலாசார மொழியாக தமிழ் போற்றப்படுகிறது. தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்துள்ளார் முதல்வர் கருணாநிதி. இதன் மூலம் 3,000 ஆண்டு கால தமிழ் பாரம்பரியத்தின் வாரிசாக அவர் விளங்குகிறார்.

கொழ‌ந்த‌சாமி அய்யா, உங்க‌ பேருக்கு ஏத்த‌மாதிரியே பேசிப்புட்டீங்க‌. இதுக்கு மேல நா எதுவுஞ் சொன்னா ந‌ல்லா இருக்காது.

தமிழர்களின் எதிர்காலம் அவர்களின் மனித வளத்தின் அடிப்படையில்தான் அமையும். மனித வளத்தின் அடிப்படையில்தான் சேது திட்டம். மண்வளம், நீர்வளம், நிலவளத்தின் அடிப்படையால் அல்ல.

ம‌ண்வ‌ள‌ம், நீர்வ‌ளத்தையெல்லாம் ஒரு பொருட்டாவே நீங்க‌ சேது திட்ட‌த்துல‌ எடுத்துக்க‌லே, அப்பிடித்தானே...?

எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கையில் கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் 2-ம் இடம் பெற்றுள்ளது. மனித வளத்திலும் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது.

அதான் மொத்த‌ டீக்க‌டைக‌ளையும் ம‌லையாள‌த்தான்க‌ளுக்கு த‌மிழ‌ன் தாரை வார்த்துட்டு ஒருவாய் காப்பித்த‌ண்ணிக்கு கூட‌ அவ‌ங்களை நம்பி இருக்கானா.... இப்போ த‌ண்ணிக்கு கூட‌ அவனுங்க‌கூட‌ ச‌ண்டைக்கு போக‌ணும் போல‌ இருக்கே.

கருணாநிதி 2-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றபோதுதான் மென்பொருள் துறை உருவாக்கப்பட்டது. அதனால்தான், இன்று சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் தமிழகம் முன்னணியில் உள்ளது.

ஆமா, அவ‌ரு ரெண்டாந்தார‌மா வ‌ந்து தான் க‌ம்ப்பூட்ட‌ரையே க‌ண்டு புடிச்சாருன்னு கூட‌ச் சொல்லுவீங்க‌ளே. கேக்க‌ற‌வ‌ன் கேணையா இருந்தா..... சாஃப்ட்வேர் ஏற்றும‌தியில‌ முன்ன‌ணி ச‌ரி; ஏழை பாழைங்க‌ அண்ட‌ர்வேருக்கு ஒரு வ‌ழி சொல்லுங்க‌, அவ‌னுக்கு கோவ‌ண‌த்துக்குத் துணியில்லே சாமி.

தமிழகத்தில் மனித வளத்தையும், அறிவியல் தொழில்நுட்ப வளத்தையும் கருணாநிதி உருவாக்கி இருக்கிறார். கல்வி வணிகமாகிவிட்டது என்று சிலர் பிரச்னைகளை எழுப்புகின்றனர். ஆனால், உலக அளவில் இன்று கல்வி வணிகமாகிவிட்டது என்பதை நாம் அறிய வேண்டும் என்றார் வா.செ.குழந்தைசாமி.

ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ன் திங்க‌றதுக்கு கொல்லைக்குப் போனா நாமளும் அப்பிடிப் போய்த்தான் திங்கணுமா அய்யா?


கலைஞர் விருது பெற்ற நடிகர் நெப்போலியன் தனது ஏற்புரையின்போது "சங்கமம்' திரைப்படப் பாடலின் மெட்டில், தன்மானத் தலைவா, தமிழினத் தலைவா, வணக்கமுங்க! இந்தத் தமிழ்நாடே உங்க பின்னாலே இருக்குங்க! என்று பாடினார்.

மாவீர‌ர் அண்ணா, மெட்டை மாத்திப் போட்டு சொத‌ப்பீட்டீங்க‌ளே... ம‌ம்ம‌த‌ராசா மெட்டுலே ந‌மீதாவையும் ஆட‌ விட்டிருந்தா அய்யா ஏதாவ‌து க‌வ‌னிச்சிருப்பாரில்லே.

இப்பாடலை, பார்வையாளர்கள் மட்டுமன்றி முதல்வர் கருணாநிதியும் ரசித்தார்.

எது பத்திக்கிட்டு எரிஞ்சா எனக்கென்ன, எங்கோவணம் பத்திரங்கற கதையாயில்ல‌ ரசிக்கீக... மவராசனா இருங்க சாமி.

******************