கடுகு.காம்
- Kadugu.Com
நையாண்டி விலாஸ்
வைகோ கைது.... சென்னையில் திடீர் பரபரப்பு
02-05-2008
இன்று காலை சுமார் ஒன்பது மணி அளவில் வைகோ தமது மகன், பேரன் பேத்திகளுடன் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்திருந்தார். பேரன், பேத்திகளுக்கு ஒவ்வொரு விலங்கையும் காட்டி விவரம் சொல்லிக்கொண்டு இருந்த போது அவரது செல்பேசி அழைத்தது, எடுத்துப் பேசினார்.
சில வினாடிகளே நீடித்த அந்த செல்பேசி உரையாடல் முடிந்த சில நிமிடங்களில் அதிரடியாக உயிரியல் பூங்காவினுள் நுழைந்த காவல் துறையினர் வைகோவை கைது செய்தனர்.
வைகோ கைது : காரணம் என்ன ? : வண்டலூர் பூங்காவில் அவருக்கு வந்த செல்பேசி அழைப்பே அவரது கைதுக்கு காரணம் என்று தெரிகிறது.
அந்த உரையாடலின் போது மறு முனையில் பேசியவர், ‘நீங்க எங்கே இருக்கீங்க?’ என்று கேட்டிருக்கிறார். வைகோ தாம் புலியின் அருகில் இருப்பதாகவும் குழந்தைகளுக்கு புலிகளைப்பற்றி விளக்கிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
வைகோவின் செல்பேசியை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த காவல் துறையினர் விரைந்து வந்து தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த குற்றத்திற்காகவும், குழந்தைகளிடம் புலிகளைப்பற்றி பிரச்சாரம் செய்ததற்காகவும் வைகோவை கைது செய்தனர்.
வைகோவின் செல்பேசி உரையாடல் பதிவு அவருக்கு எதிரான உறுதியான சாட்சியாக இருக்கும் என பெயர் வெளியிட விரும்பாத சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.
செய்தி அறிந்த ம.தி.மு.க தொண்டர்கள் வண்டலூர் பூங்காவினுள் சென்று காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர். மேலும் அவர்கள் அங்கு சிறிது அடாவடித்தனமும் செய்தனர். காவல் துறையினர் அவர்களைப் பிடிக்க முயன்ற போது உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு மத்தியில் போய் நின்று கொண்டனர். அவர்களை அடையாளம் காண்பது இயலாத காரியம் என்பதால் காவல்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
====++++====